புதன், 9 மார்ச், 2011

தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்.


சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன் 74:40-43

இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள்.

அல்குர்ஆன் 19:59

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.

அல்குர்ஆன் 23:9-11

தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.

அல்குர்ஆன் 9:11

ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, 'அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
நூல்: புகாரீ 1143